Friday, October 5, 2018

இதுல உனக்கு என்ன பெரும?

பள்ளியில் குறள் படித்தவனெல்லாம் மதிப்பெண்ணுக்காக படித்தான் என்றால், வேதம் படித்தவன் எல்லாம் ராக்கெட் விடவா படித்தான்? இவனாவது தினப்படி வாழ்வில் அவ்வப்போது சரியான பொருளில் இரண்டொரு குறள்கள் பயன்படுத்துகிறான். அந்த 1000 கோடி பேரும் மதச் சடங்குகளில் ஒப்பிக்கத்தானே படித்தார்கள்? அவர்களுக்குள் பொருளுணர்ந்து அவ்வப்போது சிலபல செய்யுள்களை சொல்லிக்கொள்கிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் இரண்டும் ஒன்றுதானே? திருக்குறள் தெரிந்தவர்கள் வெறும் மதிப்பெண்ணுக்காக படித்தார்கள்; அதனால் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாதே!

சுந்தரனார் மேற்படி பெயர்களை எல்லாம் கச்சா முச்சான்னு திட்டி எழுதி இருக்கார். அதனால அவங்களை புகழ்ந்தெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்தில் அவர் எழுதி இருக்க வாய்ப்பில்லை. பரம்பொருள் வரியை நீக்காது விட்டு வைக்க வேண்டுமென்றால் "சிதைந்து, வழக்கொழிந்த ஆரியம்" என்பதையும் வைக்கணும். இல்லையா? அதுக்கொரு சட்டம் இதுக்கு வேறயா?

அவதூறு ஏதுமில்லை. உண்மையைச் சொல்வது அவதூறு என்றால், பேதை, பெருந்தன்மையற்றவர் என்பதை எல்லாம் எந்தக் கணக்கில் வைக்க?

"தமிழை விடவும்". எந்த அடிப்படையில்? உன் ஒப்பீட்டுத் தரவு என்ன? கற்பனைகள், ஆசைகள் எல்லாம் செல்லாது. சமற்கிருதத்தின் மீது நடக்கும் ஆராய்ச்சிகள் எல்லாம் மொகஞ்சதாரோ, கீழடி, டைனோசர் எலும்புகள் போன்றவற்றின் மீது நடக்கும் புதைபொருள் ஆராய்ச்சி போலத்தான். சிலப்பதிகாரம் முதல் இன்றைய காவல் கோட்டம் வரை குண்டு குண்டு புத்தகங்களாக எழுதி படிக்கிறோமே, அந்த "கற்றவர்களை" இப்போ அப்படி ஒன்னு எழுதச் சொல்லேன் பார்ப்போம். எழுதவும் ஆளில்லை; படிக்கவும் ஆளில்லை. என்றோ இருந்ததை தோண்டித் துருவி செய்யும் ஆராய்ச்சி புதைபொருள் ஆய்வு போலத்தான்.

இதுல உனக்கு என்ன பெருமை? 47ல் Radcliffe கோடு போடுகையில் கொஞ்சம் இந்தப் பக்கம் வலிச்சு போட்டிருந்தார்னா இன்றைய "நாம் பிறந்த நாட்டின்" சில பகுதிகள் "டுஷ்மன் டேஷ்" ஆகி இருக்கும். அந்தப்பக்கம் வளைச்சு இழுத்து இருந்தார்  ன்னா, லாகூர் "மேரா பாரத் மகான்" பகுதி ஆகி இருக்கும். அவுரங்கசீப் காலத்தில் இன்றைய சில ஈரானியப் பகுதிகள் வரை ஆக்ரா/தில்லி ஆட்சியின் கீழ்தான் இருந்தது. அரபி, பெர்சியன், உருது மொழிகளுக்கும் நீ பெருமைப் பட வேண்டி இருக்கும். அதனால, "நான் பிறந்த நாட்டில் தோன்றிய மொழி" ன்னு ஓவர் செண்டிமெண்ட் ஆகாதே. யாதும் ஊரே, எல்லா மொழிகளும் மனித சாதனைகளே என்று இரு. எல்லைக் கோடுகள் எல்லாம் நாமாக கற்பனையாக போட்டுக் கொண்டவை.

உனக்கு சமற்கிருதம் எழுதவோ படிக்கவோ பேசவோ தெரியாது. உனக்கு மத/கடவுள் நம்பிக்கை இல்லை என்றும்  சொல்கிறாய். ஆக, மதச் சடங்கு மொழியான சமற்கிருதத்துடன் உனக்கு எந்த விதத்திலும் தொடர்போ அம்மொழியால்  உனக்கு பயனோ இல்லை. தொடர்பில்லாத ஒன்றில் நீ பெருமைப் பட என்ன இருக்கிறது? நீ பெருமைப் பட வேண்டியது தமிழில் பேசி, எழுதி, சண்டை போட்டு தமிழின் நீட்சிக்கு பங்களிக்கிப்பதற்கு. "நாம் பிறந்த" என்ற பெருமை அங்கே சரி, உண்மை. மற்றபடி, யாதும் ஊரே, யாரவரும் கேளிர்; வழக்கொழிந்த மொழிகள் உட்பட எல்லா மொழிகளும் மனித சாதனைகளே என்று பெருந்தன்மையாக இருப்பதில் தப்பில்லை.

* இனி அடிச்சு கேட்டாக் கூட இத்தலைப்பில் பதில் பேசமாட்டேன்னு ஒருத்தருக்கு சூடம் அடிச்சு உறுதி கொடுக்காத குறையாகச் சொன்னேன். அவர் சிரிப்பது கேட்குது.