Friday, February 25, 2022

கமா, சோம்பல் மற்றும் பக்கோடா

 வாடா செல்வம், நேத்திக்கே உங்கிட்ட பேசணும்னு நெனச்சேன், முடியாம போய்டுச்சு. உட்கார், ஒரு காபி போட்டுட்டு வர்றேன் குடிச்சுட்டே பேசலாம்.

வேலையெல்லாம் எப்படி போகுது?

ம்.. கொஞ்சம் கடியாத்தான் போகுது. எதையாவது உடைச்சிடறானுக; அப்புறம் நாம விடிய விடிய உட்காந்து சரிசெய்ய வேண்டி இருக்கு. ப்ச்., அதுக்குத்தானே சம்பளம் குடுக்கறாங்கன்னு ஒன்னும் பேசறதில்லை. புகார் படிக்க ஆரம்பிக்கும் போதே முற்றுப்புள்ளி வெச்சிடறது. எதுக்கு வம்பு.

காபி நல்லாயிருக்கு.

அடுத்த முறை வரும்போது கொஞ்சம் வெங்காய பக்கோடா போடு; இல்லாட்டி நான் போட்டு எடுத்து வர்றேன். வெறும் காபி குடிக்கறத்துக்கு அது இன்னும் நல்லாயிருக்கும்.

உனக்கு இல்லாமலா? கண்டிப்பா. இன்னிக்கு கொஞ்சம் சோம்பலா இருக்கு, அடுத்த முறை போண்டா போட்டு வைக்கிறேன்.
அது கிடக்கட்டும், முற்றுப்புள்ளின்னதும் நினைவுக்கு வருது, தமிழில் நிறுத்தக்குறிகள் எனும் punctuations போன நூற்றாண்டு வரை இல்லைன்னு சொன்னாயாமே? உண்மையாவாடா?

ஆமா.
அச்சு இயந்திரங்கள் வந்து, நாம புத்தகங்கள் அச்சிடும் போது கூட நிறுத்தக் குறிகள் தமிழில் புழக்கத்தில் கிடையாது. ஐரோப்பிய மொழிகள் அறிமுகம் ஆன போது, நமக்கு punctuations புதுசா இருந்திருக்கு. அவர்களுக்கே அது அப்போது ஒரு மாதிரி புதுசுதான். நாமளும் சும்மா இருக்காம உரைநடையில் பயன்படுத்திப் பார்த்த போது, அட இதுகூட வசதியாத்தானே இருக்குன்னு கபால்ன்னு பிடிச்சிகிட்டோம்.

ஆங்கில punctuation பற்றி ஒரு interesting ஆன trivia சொல்லவா?

ம், சொல்லு கேட்போம்.

வரிசையா பட்டியல் இடும்போது நடுவில் கமா போடறோம் இல்லையா? கடைசிச் சொல்லுக்கு முன் and என்று எழுதி கடைசிப் பட்டியல் பொருளை எழுதி முடிச்சிடறோம்.
அதாவது,
Fri, Sat and Sun. என்று.

கொஞ்ச காலம் முன் வரை கூட andக்கு முன் ஒரு கமா இருந்திருக்கிறது. Fri, Sat, and Sun. என்று.
அதான் and இருக்கே வெட்டியா எதுக்கு கமா - அச்சு செலவை மிச்சம் பிடிக்கலாம் என்று தூக்கிட்டானுக.

ஓ வாவ்!

சரி சோம்பேறி. நான் கிளம்பறேன்.

டேய் இருடா. சோம்பல் போய்டுச்சு. பக்கோடா போட்டுத் தர்றேன் சாப்டுகிட்டே இன்னும் கொஞ்ம் நேரம் பேசிட்டு இருக்கலாம்.

சரி, செய். சோம்பல் இல்லா மன்னவனுக்கு அவன் ஆட்கள் அளந்த நிலமெல்லாம் சொந்தமாகும்னு வள்ளுவரே சொல்லியிருக்கார். சோம்பலை வென்ற உன்னால் கொஞ்சம் வெங்காய பக்கோடா சொந்தமாகாதா என்ன. நீ ஆரம்பி, நான் முடிக்கிறேன் - சாப்பிட்டு.

இப்போ சொன்னியே அந்தக் குறளையும் அதற்கான விளக்கத்தையும் இந்த வெங்காயத்தை வெட்டிட்டே சொல்லு, நான் மாவு கரைக்கிறேன்.

மடியிலா மன்னவன் எய்தும் அடி, அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.

அதாவது,
சோம்பல் இல்லாத மன்னவன் அடையும் எல்லை என்பது, அவன் ஆட்கள் - surveyors-ன்னு வெச்சுக்கோயேன்; அளந்த எல்லா நிலமும் உள் அடங்கியது என்கிறார்.

இப்போதைக்கு நீ சுடும் பக்கோடாவின் கலோரிகளை அளக்கிறேன், அளவாக உண்கிறேன்.

பக்கோடாவும் நல்லாயிருக்கு. ஒரு டப்பால 4 போட்டுக் கொடு அப்புறமா கொஞ்சம் சாப்பிடறேன்.

நேரமாச்சு, கிளம்பறேன். அடுத்த வாரம் வர்றேன். Bye.

---

மடி = சோம்பல்
மடியிலா = சோம்பல் இல்லாத
மன்னவன் எய்தும் அடி = மன்னவன் எய்தும் எல்லை
அளந்தான் = Surveyor
தாயது = சொத்து
எல்லாம் ஒருங்கு = எல்லாம் சேர்ந்து
---

மடியிலா மன்னவன் எய்தும் அடி,  அளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு

சோம்பல் இல்லா மன்னவன் எய்தும் எல்லை, நில அளவர்கள் -surveyors அளந்த தாயம் எல்லாம் உள் அடங்கியது.

 

#குறளும்_பொருளும்

Sunday, February 13, 2022

நீங்க படிக்கிற பள்ளிக்கூடத்துக்கு நான் தலைமை ஆசிரியர், தம்பிகளா!

 

 
கண்மணி, அன்போட காதலன் நான் எழுதும் கடிதம்..
கண்மணியே காதல் என்பது..
கண்மணி நீ வர காத்திருந்தேன்..
கண்மணிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது..
கண்மணி ஓ காதல் கண்மணி..

என தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட ஒரு ஏழெட்டு கண்மணி பாட்டாவது சொல்லிடுவோம். திரைப்பாடல்கள் மட்டுமல்ல தினப்படி வாழ்க்கையிலும் "கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துக்குவேன்", "கண்ணுக்கு கண்ணானவள்" என்று கண்மணி எனும் பாவையைப் பற்றிப் பேசாதவர் இல்லை, பாடாத புலவர்கள் இல்லை, காதலர்களும் இருந்ததில்லை; இருப்பதில்லை.

மனிதர்களோ, விலங்கு, பறவை மற்ற உயிரினங்களோ, எல்லாவற்றுக்கும் கண்ணும் அதன் பார்வைக்குக் காரணமான பாவையும் (கண்மணி)யும் எவ்வளவு இன்றியமையாதது என அறிந்திருப்பதால் காதலன்/காதலியை அந்தக் கண்மணி போன்றவர் என்று சொல்லி மகிழ்கிறோம்.

மேலே சொன்னமாதிரியான திரைப்பாடல் ஆசிரியர்கள், புலவர்கள், எல்லோரும் காதலன்/காதலியை அவ்வளவு சிறந்த கண்மணிக்கு ஒப்பாக வைத்து கிறங்கிப் போய் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.

நம்மாளு வள்ளுவர் அவர்களைப் பார்த்து, தம்பிகளா சின்னப் பசங்க எல்லாம் ஓரமா போய் விளையாடுங்க என்கிறார் ஒரே ஒரு குறள் மூலமாக.

காதலன் தன் காதலியை நினைத்து தன் கண்மணியிடம் பேசுவது போல ஒரு குறள்.

"யய்யா கண்மணி, நீ மிக உயர்ந்த, மிக மிக மதிப்பு மிக்க உறுப்புதான். இல்லைங்கல. ஆனா பாரு, என் காதலி உன்னைவிட உயர்ந்தவள். அந்த அழகு நெற்றியாளை என் கண்ணுக்குள் வைத்து அவள் வழியாக உலகைப் பார்க்கப் போகிறேன்; நீ கொஞ்சம் இடத்தைக் காலி பண்ணு" என்கிறார்.

படிப்பதை நிறுத்திவிட்டு இக்காட்சியை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நம் உடலின் உறுப்புகளில் மிக உயர்ந்ததான கண்மணியை விட உயர்ந்தவளாம் காதலி. கண்மணி இருக்கும் இடத்தில் அவளை வைத்து காண்பவை எல்லாம் அவளாகவே காண விரும்புகிறானாம். அதனால் தன் சொந்தக் கண்மணியை இடத்தைக் காலி செய், போ என்கிறானாம்.

யோவ் வள்ளுவரே, காதல் மன்னன்யா நீர். பின்றய்யா என்று சொல்ல வைக்கும் குறள்.

கருமணியின் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்

கருமணியின் = கண்ணின்
பாவாய் = Pupil
நீ = நீ
போதாயாம் = போய்விடேன்
வீழும் = நான் மயங்கிப் போய் காதலில் வீழ்ந்து கிடக்கும்
திரு + நுதற்கு = அழகு + நெற்றி கொண்டவளுக்கு

இப்படிப் படிக்கலாம்:
"கண்ணின் பாவையே நீ போய்விடேன் - என்னைக் காதலில் வீழ்த்திய அழகு நெற்றியாள் இங்கு வருகிறாள்; அவளுக்கு நீ இருப்பதால் இடமில்லாமல் இருக்கிறது"

இதில் ஒரு இரட்டுற மொழிதல் (Double meaning) வேறு - நல்ல விதமாகத்தான் :)

பாவை என்ற சொல்லுக்கு பெண் என்ற பொருளும் உண்டு. இவன் கண்ணுக்குள் இருக்கும் பாவையை போகக் சொல்லிட்டு மனதுக்குள் இருக்கும் பாவையை (காதலியை) அங்கே வைக்கப் போகிறானாம்.

கவிதையில் அழகு, மாபெரும் கற்பனை, செய்யுள் வடிவம் மாறாமல் தளை தட்டாமல் எழுதிய ஒன்றரை அடி அதிசயம். 
ஐயனே, உம்மை நவில் தோறும் அதிசயிக்கிறோம்.