Saturday, October 5, 2019

முத்தம் குடு Vs முத்தம் தா

இரண்டுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?

வேறுபாடு இருந்தா என்ன,  என்ன இல்லாட்டா என்ன? கேட்ட முத்தம் கிடைச்சா போதும்தான். சரிதானே?

ஆனா, ஒரு கிளுகிளுப்பான வேறுபாடு இருக்கு.  என்னன்னுதான் பார்த்திடுவோம்.

சூட்டோட சூடா முதல்ல கொஞ்சம் இலக்கணம் படிச்சிடலாம்;  முத்தத்துக்கு அப்பால வருவோம். (காதுகள் கிடைக்கும் போதே இலக்கணம் சொல்லிடணும்)

கொடு, தா, ஈ எனும் கிட்டதட்ட ஒரே பொருள் கொடுக்கும் மூன்று சொற்களிடையே ஒரு மெல்லிய வேறுபாடு காட்டுகிறார் தொல்காப்பியர்.

மூன்றும் ஒரே செயலைக் குறிப்பதுதான் என்று முதலிலேயே(1) சொல்லிடறார்.
'ஆனா பாருங்க..' அப்படின்னு ஒரு * போட்டு அடுத்த மூன்று தனித்தனி வரிகளில் வேறுபாட்டை விளக்கறார். (2,3,4)

* ஈ என்னும் சொல்லை இழிந்த நிலையில் இருப்பவர் அவருக்கும் உயர் நிலையில் இருப்பவரிடம் சொல்லிக் கேட்பது. (ஈ என இரத்தல் இழிந்தன்று -  புறநானூறு)
* தா என்னும் சொல்லை சரிக்கு சரியாக இருப்பவரிடம் சொல்லிக் கேட்பது.
* கொடு என்ற சொல்லை உயர்ந்த நிலையில் இருக்கும் போது அவ்வளவு உயர் நிலையில் இல்லாதவரிடம் கேட்பது. 

கொடு என்றாலே வளைதல் என்று முன்பு ஒரு முறை பார்த்தோம் (கொடுவாள், கொடுக்காப்புளி, கொடுக்கு என வளைந்ததற்கு எல்லாம் அதன் பெயர்கள்  காரணப்பெயர்களாக அமைந்தவையே). உயர்ந்த இடத்தில் இருந்து வழங்குபவரது கைகள் வளைந்து இருப்பதால் அது 'கொடு'ப்பது என்று சொல்வது உண்டு.

இப்போ, முத்தத்துக்கு வருவோம்.

காதலில் எப்படியும் முத்தத்தைக் கேட்கலாம் வழங்கலாம்; இருந்தாலும் நாம இலக்கணம் நினைவு வெச்சுக்க முத்தம் கேட்பதை இணைத்து நினைவு வெச்சுக்கிட்டால் எளிதில் மறக்காது.



நிதானமாக வளைஞ்சு 'கொடு'ப்பது - முத்தம் கொடுப்பது. கொஞ்சம் உயர் நிலையில் இருந்து வளைஞ்சு கொடுப்பதால் இது மூன்றாவது வகை.





அவசர அவசரமாக 'அப்படியே' தருவது/பெறுவது - முத்தம் தருவது.  தன் நிலையில் இருந்து தாழாது/உயராது அப்படியே இருந்தபடியே தருவது/பெறுவது.


ஆச்சா? இப்போ முதல் வகை.
இரந்து (கெஞ்சி, கூத்தாடி) பெறுவது. இதைப்  படம் போட்டுக் காட்ட வேணாம். அவரவர் கற்பனைக்கே விட்டுடலாம். முன்பே சொன்ன மாதிரி காதலில் எப்படிக் கேட்டாலும் சரியே. கெஞ்சுவதும் மிஞ்சுவதும் அவரவர் காதலின் அளவு; அதுக்கு எதுக்கு படம் போட்டுக்கிட்டு.. :-)

எனவே நண்பர்களே,
* தன் நிலையில் இருந்து இறங்கி, இரந்து கேட்பவருக்கு வழங்குவது - ஈவது.
* சரி நிகராய் இருப்பவருக்கு வழங்குவது - தருவது
* உயர் நிலையில் நாம் இருந்து 'வளைஞ்சு' வழங்குவது - கொடுப்பது.

பேச்சு வழக்கில் தா, கொடு என்பதற்குள் இருக்கும் வேறுபாட்டை நாம பெரிசா கண்டுக்கலைன்னாலும் இப்படி ஒன்னு இருக்குன்னு தெரிந்து வைத்துக்கொள்வதில் தப்பு இல்லைதானே.

நாளபின்ன, என்ன வகை முத்தம் கிடைத்தது; கிடைத்த/வழங்கிய முத்தம், கொடுக்கப்பட்டதா தரப்பட்டதான்னு ஆராய்ச்சியில இறங்கலாம் பாருங்க.. :-)


இதுதான் அந்தத் தொல்காப்பிய வரிகள்:
ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகு இடன் உடைய. 1

அவற்றுள்,
ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே. 2
தா என் கிளவி ஒப்போன் கூற்றே. 3
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே. 4


தமிழ் வகுப்பில் இளம் மாணவர்களுக்கு சொல்லித்தர இதே கட்டுரை வேறொரு வடிவில் இங்கே: கடன் தா  Vs  கொடு


  #ஞாயிறு போற்றுதும்.

Saturday, September 28, 2019

இரட்டைக் காப்பியர்கள்

அப்பாவின் நண்பர் ஒருவர் வந்திருந்தார். முதல் முறையாக அவரைச் சந்திக்கிறேன். அவர் இளங்கோ என்றும் சில பல ஆண்டுகளுக்கு முன் ஒரே அலுவலகத்தில் பணி புரிந்ததாகவும் அப்போது நண்பர்கள் ஆனதாகவும் சொன்னார்கள். அறிமுகப் படலத்திற்குப் பின் கொஞ்சம் சரளமாக பேசிக் கொண்டிருந்தோம்.

தமிழர் பண்பாட்டின் படி கொஞ்ச நேரத்தில் அரசியல் பேசத் தொடங்கினோம்.

அவரோட தந்தையார், ​அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் மற்றும் தமிழ் இரண்டிலும் கவரப்பட்ட அன்றைய டிபிகல் தமிழக இளைஞர் என்றும், எப்படி இன்றைய தமிழகம் அண்ணாவால் வடிவு பெற்றது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். ஆர்வமாகத்தான் போய்க் கொண்டிருந்தது, அல்லது அப்படித் தோன்றியது.

என் அப்பா பேச்சை மாற்ற நினைத்து, "உங்க அண்ணன் எப்படி இருக்கார்" என்றார்.

"செங்குட்டுவன் நல்லா இருக்கானுங்க, ரிட்டையர் ஆனப்புறம் கேரளால மகள் வீட்டுக்குப் பக்கத்துலயே வீடு வாங்கிட்டு போய்ட்டார். ஒரே மகள், பக்கத்திலேயே இருக்கலாம்னு அங்க போய்ட்டார்".

என் முகத்தைப் படித்தவராக அப்பா சொன்னார், "இவரும் இவர் அண்ணனும் இரட்டையர்கள், அவர் பெயர் செங்குட்டுவன்".

செங்குட்டுவன் - இளங்கோ.

அட!

இளங்கோ கிளம்பும் போது அவர் அண்ணன் செங்குட்டுவனின் மகளுடைய பெயர் என்ன என்று கேட்டேன். சொன்னார்.

"மணிமேகலை"

_________


உண்மையில் இது சில வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. மானே தேனே சேர்த்தது மட்டும் என் பங்கு.



*******