Monday, September 25, 2017

கொடுந்தமிழ். ​அப்படின்னா?

​செந்தமிழ் தெரியும், பைந்தமிழ் கூட தெரியும், அதென்ன கொடுந்தமிழ்?
கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் சரியான பொருளில் பயன்படுத்தப்பட்டிருந்ததா எனப் பார்த்து விடுவோம்.

Spoiler: அது எதிர்மறைச் (negative) சொல் அல்ல.

இலக்கண விதிகள் வழுவாமல் சொற்கள் அப்படியே இருத்தல் நலமே. ஆனால் மக்கள் பல திசைகளுக்கு பணி நிமித்தமாகவும் வேறு பல காரணங்களுக்காகவும் போய் வரும்போது அந்தந்த வட்டாரங்களின் தன்மைக்கேற்ப தமிழையும் வளைத்து பேசுவர். அது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, தவிர்க்கத் தேவை இல்லாததும் கூட.

மேலே  உள்ள பத்தியில் 2 விசைச் சொற்கள் (keywords) உள்ளன. திசை, வளைத்து ஆகியன. வேண்டுமென்றேதான் அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. எதற்காக என பார்ப்போம்.

தமிழ் பேசப்பட்ட நிலம் செந்தமிழ்-நிலம் (Mainland). அதைச் சுற்றி அமைந்த மற்ற நாடுகளில் இருந்து வந்து போகும் மக்கள் மூலமாக தமிழுக்குள் வரும் சொற்களை திசைச்சொற்கள் என்கிறார் தொல்காப்பியர். அதாவது, ஒரு பொருளைக் குறிக்க வழக்கமான சொல்லைத் தவிர்த்து வேறு புதிய ஒரு சொல்லை பயன்படுத்துவது. எகா: சிறுகுளம் என்பதை கேணி என்று ஆற்காடு பக்கம் சொல்வது.

இப்படி மொழியை வளைத்து, ஒரு பொருளை வேறு ஒரு திசையில் இருந்து வந்த சொல்லின் வழியாக குறிக்கும் போது அந்தச் சொல் "திசைச்சொல்".

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினுந
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொ.கா)


ஆச்சா..
இப்போ, ஏன் "கொடுந்தமிழ்"?
கொடு என்றால் வளைதல்.

எகா:
கொடுவாள் (வளைந்த வாள்), கொடுங்கோல் (வளைந்த அரசு - அறத்தில் இருந்து வளைந்த அரசு), கொடுக்காப்புளி, கொடுக்கு..

அதன்படியே, வளைந்த தமிழ் = கொடுந்தமிழ்.

​நன்னூல் வரை திசைச்சொல் என்றே சொல்லி வந்திருக்கிறார்கள். நன்னூலுக்கு உரை எழுதும்போது தான் "வளைந்திருக்கிறது".​

​இப்போது அதையே நாம் வட்டார வழக்கு என்று சொல்கிறோம்.​

​வீட்டுப்பாடம்:
உங்களுக்கு தெரிந்த கொடுந்தமிழ்/திசைச்சொல்/வட்டார வழக்குகளை குறிப்பிடுங்கள்.​

Monday, September 18, 2017

​தமிழின் மிக நீண்ட சொல்


ஆங்கிலத்தில் மிகப் பெரிய (நீண்ட) சொல் எது எனக் கேட்டால் நம்மில் சிலர் கூகுளை கேட்காமலேகூட சொன்னாலும் சொல்லி விடுவோம்.

தமிழில்?

தமிழின் எளிமை அப்படி நீண்ட தனிச் சொற்களை ஊக்குவிப்பதில்லை. எது "சொல்" என்பதற்கே நாம் தெளிவான வரைமுறை வைத்திருக்கிறோம்.
பெயர், வினை. அவ்வளவுதான் வகைகள்.
இடைச்சொல், உரிச்சொல் எல்லாம் பெயர், வினைச் சொற்களைச் சார்ந்தது.

இதிலும்
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொ.கா) 
என்ற கட்டுப்பாடு வேறு ​உண்டு.

இப்படி அமையும் சொற்களைப் பிரிக்க (பகுக்க) முடிந்தால் அவை தனிச் சொற்கள் அல்ல. கூட்டுச் சொற்கள்.

அதன் Grammatical terms: பகுபதம், பகாபதம்.
பகும் (பிரியும்) சொற்கள் (பதம்) - பகுபதம்.
பகாச் சொற்கள் - பகாபதம்.

எகா:
படித்தான் = படி + ஆன். இது பகுபதம் (பிரியும் சொல்).
படி என்பதை மேலும் பகுக்க முடியாது​. எனவே பகாபதம். (பிரியாச் சொல்)

ஆச்சா?
இப்போ வருது நன்னூல் உதவி:
பகாப்பத மேழும் பகுபத மொன்பதும் 
எழுத்தீ றாகத் தொடரு மென்ப

அதன்படி உயர் அளவாக,
பகாபதம்: 7 எழுத்துக்கள்.
பகுபதம் : 9 எழுத்துக்கள்.

ஆக, technically உயர்ந்த அளவாக 9 எழுத்துக்களே இந்தச் சொல்லிலும் வர முடியும். இதைக் காட்டிலும் நீண்ட சொற்கள் எல்லாம் பல சொற்களை நாமாக சேர்த்து எழுதியதாகத்தான் இருக்கும் என்கிறார்கள். மறுப்போரும் உண்டு. ஆனால் நன்னூல் சொல்வது மேலே குறிப்பிட்டது போலத்தான்.

எதற்காக இவ்வளவு கட்டுப்பாடுகள்?
புதிய சொற்களை ஆக்கும் போது அவை பயனுள்ளதாக மட்டுமின்றி எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே.