Saturday, December 31, 2022

எவ்வளவு விரைவாகக் கொடுக்க வேண்டும்?

 

உலகின் மிகப்பெரும் கருணையாளர்கள் எனப் பட்டியலிட்டால் கண்டிப்பாக வள்ளுவர் அதில் இடம்பெறுவார்.

துன்பம் கொள்ளும் மனிதனைக் கண்டு கசிந்து உருகுகிறார். வசதியானவர்கள் வறியவர்களுக்கு கணக்குப் பார்க்காமல் உதவிட வேண்டும் என்கிறார். தன்மானக்காரர் வேறு. வறுமை பீடித்து இரக்கும் நிலை (begging) போல இழிநிலை வேறு இல்லை என்கிறார். இரவு (இரத்தல் - begging பற்றியது), இரவு - அச்சம் (இரப்பதற்கு அஞ்சவேண்டும்) என்று இரு முழு அதிகாரங்கள் எழுதியிருக்கிறார்.

எவ்வளவு முயன்றும் இரந்தே உயிர் வாழவேண்டும் என்ற நிலை ஒருவனுக்கு உருவாகிவிடுகிறது என்றால், அப்படியான சூழலை உண்டாக்கியவனும் அப்படியே இரந்து கெட்டு அழியட்டும் என கலகக்குரல் எழுப்புகிறார்.

இவ்வளவும் சொல்லிவிட்டு, செல்வம் சேர்ந்து இருப்பவரிடம் "தாராளமாகக் கொடு-கெட்டுப்போகமாட்டாய்" என முழுதாக 10 குறட்பாக்களை எழுதுகிறார்.
இல்லறத்தில் இருப்பவரிடம் ஈகை எனும் கொடுக்கும் குணம் பற்றி கூறும் போது இவ்வாறு சொல்கிறார்.

பெரும்பாலான அற நூல்கள் கொடுப்பதை மகிழ்வான, உயர்ந்த, பெருமைப்படும் ஒன்றாகவே சொல்லும். ஐயன் மாறுபடுகிறார். கொடுப்பதால் தலைக்கனம் கூடி விடக் கூடாது என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது.

உதவி கேட்டு வந்தவரது இயலாமையைக் கேட்டுக் கொண்டு இருந்து தாமதிக்காதே என்கிறார். இரப்பவனது முகம், கிடைக்கும் உதவியினால் மலரும் வரை உதவிடும் உனக்கு மகிழ்ச்சியில்லை, எனவே உடனடியாக துன்பம் களை என்கிறார்.

நின்று நிதானித்து யோசியுங்கள்.
நீங்கள் ஒருவருக்கு உதவுகிறீர்கள். எதிரில் இருப்பவரோ தன்மானம் தடுத்தும் வேறுவழியின்று இரந்து நிற்கிறார். துன்பத்தில் இருக்கிறார். பொருள் கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் அவர் முகம் மலரும் கணம் வரை உனக்கும் துன்பமே என்ற சிந்தனை எவ்வளது மனிதம் கொண்டது.

குறள் இதுதான்:
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு

பொருள்கோள் வகைப்படி மாற்றி அமைத்துப் பார்க்கும் போது,

இரந்தவர் இன்முகம் காணும் அளவு
இரக்கப் படுதல் இன்னாது


/* இரந்தவர் = உதவி கேட்டு வந்தவர்
இன்முகம் = மலர்ந்த, மகிழ்வான முகம்
காணும் அளவு = காணும் வரை
இரக்கப்படுதல் = உதவலாம் என்று நினைக்கும் ஈகை உள்ளம்
இன்னாது = இனிமை அடையாது */

உதவி கேட்டு வந்தவரது துன்பக்கதையைக் கேட்டு காலம் தாழ்த்துதல் இன்பம் தராது, இரப்பவரது முகம் மலரும்படியாக உடனடியாக உதவிடு என்கிறார்.

சொல்லாமல் புரிய வைத்தது மேற்சொன்ன பணிவும், இரப்பவனது நிலையை எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு விரைவாக மாற்ற உதவிடு என்ற கருத்தும்.

தன்மானம் தடுத்தும் வேறு வழியின்றி இரந்து நிற்கும் மனிதனது பதைபதைப்பைக் கண்டு ஐயன் கலங்குகிறார். உதவிடும் நிலையில் உள்ளவனிடம் உடனடியாக உதவு, அவன் முகம் மலரும் அளவுக்கு உதவு, அவன் பதைபதைப்பு விலகும் வரை உனக்கும் இன்பம் இல்லை என்கிறார்.

முதல் முறை படித்தபோது இக்குறளின் அடர்த்தி வெகு நாட்களுக்கு அலைகழித்தது.

Monday, October 31, 2022

சேற்றில் சிக்கிய யானை

 

​​
​ உலகம் இயங்கும் விதம் வியப்பானது என்றபடியே வந்தான் செல்வம்.

எதைப்பற்றிடா சொல்கிறாய்?

'யூவால் ஆரரி' எழுதியிருக்கும் சேப்பியன்கள் என்ற புத்தகத்தைப் படித்தேன்; இயற்கை யார் பக்கமும் சாய்வதில்லை, வலிமை கொண்டவர்கள் வாழ்கிறார்கள் வலிமை குறைந்தால் எதிர்பாரா இடங்களில் இருந்து கூட ஆபத்துகள் வரும் - வரலாறு அப்படித்தான் சொல்கிறது என்கிறார்.

வரலாற்று ஆசிரியராக அவர் பல எடுத்துக்காட்டுகளையும் விரிவாக விளக்குகிறார்.

வரலாறு மாத்திரம் அல்ல, அறிவியல் அறிஞர் டார்வினின் படிமலர்ச்சி [Evolution] கோட்பாட்டில் இருந்து பிறந்த புகழ்பெற்ற "தக்கன பிழைக்கும்" [Survival of the fittest] என்ற தத்துவமும் அதைத்தானே வேறு மாதிரி சொல்கிறது.

வலிமை உள்ளவரை சிக்கவில்லை. ஏதோ காரணங்களால் உடல் நலமோ, பொருள், உறவு, அறிவுரை சொல்லும் சுற்றம் போன்றவை கெட்டுப்போய் குழப்பத்தில் சிக்கிக் கொண்டால் அது நாள் வரை மறைந்திருந்த சிறு எதிரிகள் கூட வெளிப்பட்டு கோரைப் பற்களைக் காட்டக்கூடும். உண்மையிலேயே நிலவரம் கலவரமாகப் போய் இருந்தால் உயிரையே கூட எடுத்துவிடக் கூடும்.

வரலாறும் அறிவியலும் பட்டறிவும் காட்டும் இக்கருத்தை ஐயன் வள்ளுவர் சொல்லாமலா இருப்பார்.

களம் பல கண்ட போர் யானையாகினும் எதிர்பாராச் சூழலால் சேற்றில் சிக்கிக் கொண்டால் சிறு நரி கூட அந்த வலிமை மிக்க யானையைக் கொன்றுவிடும் என்கிறார்.

கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சா
வேல்ஆழ் முகத்த களிறு


கால் ஆழ் களரில் = கால் ஆழமான சேற்றில்
நரி அடும் = நரி கொல்லும்
கண் அஞ்சா = பயம் இல்லா (கண்ல பயம் தெரியாத)
வேல் ஆழ் முகத்த களிறு = முகத்தில் வேல் ஆழமாக பதிந்த யானை (களம் பல கண்டு  விழுப்புண் கொண்ட போர் யானை)
களிறு = யானை

பயமறியாத, களம் பல கண்ட, ஆழமான விழுப்புண் கொண்ட வீரமான யானையாக இருந்தாலும் கால் அசைக்க முடியாத ஆழமான சேற்றில் சிக்கிக் கொண்டால் சிறு நரி கூட அம்மாம்பெரிய யானையைக் கொன்றுவிடும்.

அதனால, எப்பவும் நீ இருக்கும் இடம் பற்றி கவனமாக இரு என்கிறார். ஒன்றைச் சொல்லி இன்னொன்றைப் புரிய வைக்கிறார். ("பிறிது மொழிதல் அணி" - நினைவு இருக்கா?)

வேந்தனோ, படைத்தலைவனோ, ஏன் கொள்ளைக் கூட்டம் நடத்தும் நபராகக் கூட இருக்கலாம். அவரவர் தம் வலிமை குன்றாது இருக்கும் வரை சிக்கவில்லை. யாருக்கும் அஞ்சாத, களம் பல கண்டு விழுப்புண் கொண்ட வீரராக, எல்லோரும் பம்மி வணங்குபவராகக் கூட இருக்கலாம். ஆனால், காலச்சூழலில் தன்னைச் சுற்றி சரியான இடம் அமைத்துக் கொள்ளாமல், இயங்க முடியாத சேற்றில் சிக்கிய யானையாகிவிட்டால் காத்திருக்கும் நரிக்கூட்டம் கமுக்கமாக, என்றைக்குச் செத்தார் என்றுகூட அறிய முடியாதவாறு கொன்றே விடும். - அறிவியல், இலக்கியம், வரலாறு எல்லாம் சொல்லும் செய்தி இது.

திகில் செய்திகள் (facts) போதும். வலிமை குன்றா காபி ஒன்று போட்டுக் கொடேன் - அதான் Strong coffee என்றான் செல்வம் சிரித்தபடி.

Friday, September 30, 2022

பிரிவால் கொடுமையாக நீளும் இரவுகள் [குறளும் பொருளும்]

 உலகம் எங்கும் என்றும் மாறாத மனித உணர்வுகளுள் ஒன்று பிரிவுத்துயர். இன்று என்னதான் தொலைத்தொடர்புகள் வளர்ந்துவிட்ட போதிலும் அன்புக்குரியவர் அருகில் இல்லை என்ற துயரம் எல்லோருக்கும் நேர்வது.

காலையில் வேலைக்குப் போகும் போது செல்ல மகள்/ன் முகம் வாடிப்போவது முதற்கொண்டு நிரந்தரமாக இறப்பு பிரித்துக் கொண்டு போகும் போது ஏற்படும் துயரம் வரை நாம் சந்திக்கும் பிரிவுகள் வலிமிகுந்ததே.

நிரந்தரப் பிரிவு ஒரு வகை வலியெனில் தற்காலிக பிரிவுகள் இன்னொரு வகை. எதிர்பார்த்து நடக்கும் பிரிவுகளான நண்பர்கள் படிப்பு காரணமாக, அல்லது பெற்றோருடன் வேறு ஊருக்கு மாற்றலாகிப்போவது என இளவயது பிரிவுகள். பின் நடுவயதில் மகள்/ன் கல்லூரி, மணம், பணிநிமித்தம் காரணமாக வீட்டைவிட்டு கிளம்பும் போது ஏற்படும் பிரிவுகள் என பிரிவு எப்போதும் கண்ணீர் நிரம்பியது. யோசித்துப் பார்த்தால் மருத்துவமனைகளை விட பேருந்து, தொடர்வண்டி, வானூர்தி நிலையங்கள் காணும் கண்ணீர் மிக அதிகம்.

அது கிடக்கட்டும். காதல் ஏற்படுத்தும் பிரிவுத் துயர் சற்று சிறப்புற்றது.
காதல் துணையின் பிரிவு தவிக்கவிடும். வெளியில் யாரிடமும் சொல்லி ஆறுதல் தேட கூட முடியாது. தோழியோ தோழனோ இருப்பின் அவரிடம் மட்டும் சொல்லிப் புலம்பலாம். இன்றைய தொலைத்தொடர்புக் கருவிகள் இல்லாத முற்கால காதலர்களை நினைத்துப் பாருங்கள். தென்றலையும் மேகத்தையும் தூதுவிட்டுக் கொண்டு காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

அப்படியான ஒரு பெண், பிரிவின் வலி தாளாது தவிக்கும் ஒரு காட்சியை திருக்குறளில் அமைத்திருக்கிறார் ஐயன்.

திருக்குறளை நாடக வடிவமாகவும் பார்க்கலாம், ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு காட்சியாகவே எழுதப்பட்டிருகிறது - அதிலும் குறிப்பாக காமத்துப்பால் நாடகக் காட்சிகளேதான் என்பார்கள். அந்தப் கோணத்தைப் (perspective) பற்றி இன்னொரு நாளில் பேசுவோம். இன்று பிரிவுத்துயர் கொண்டு வாடிப்போய் இருக்கும் தலைவி தன் தோழியிடம் பேசுவது/புலம்புவது போன்ற ஒரு அதிகாரம் படர்மெலிந்திரங்கல் [படர் மெலிந்து இரங்கல்]. இதில் இருந்து ஒரு குறளையும் அதன் அசத்தும் கற்பனையும் பார்க்கலாம்.

காட்சி இதுதான்:
பயல் இவளை வீட்டில் விட்டுவிட்டு பணி நிமித்தமாகவோ, வேறு காரணமாகவோ எங்கேயோ போய் இருக்கிறான். போனவன் பற்றி தகவல் ஏதுமில்லை. அம்மிணி பசலை நோய் கொண்டு வழி மேல் விழிகொண்டு காத்திருக்கிறாள். சில பல நாட்களும் போய்விட்டது. புலம்புகிறாள். கண்ணீர் சிந்துகிறாள்.

ஏதேதோ சொல்லிப் புலம்புகிறாள். தவிக்க விட்டுட்டு போயிருக்கானே, வரட்டும் பெரிய சண்டை போடுகிறேன் என்கிறாள். உடனேயே, அய்யோ நட்போடு இருக்கும் போதே இவ்வளவு துன்பம் தருகிறானே பகையாகிப் போனால் சமாளிக்கவே முடியாதே என்றும் சொல்லிக் கொள்கிறாள்.

தான் இப்படி அவனை நினைத்து வருந்துவது யாருக்கும் தெரியாமல் இருக்கும்படி நடந்துகொள்ளலாம் என்றால் இந்தக் காதல் நோய் மறைக்க மறைக்க ஊற்று போல் பெருகுதே, நீ சம்பாதித்து கிழித்தவரை போதும், என்னப் பார்க்க வாடா என்று தூது விடலாம் என்றாலும் என் நாணம் தடுக்கிறது. நாணமும் காதலும் மாறிமாறி வந்து எதும் செய்ய விடாது பாடாய்ப் படுத்துகிறது. அவன் இருக்கும் இடத்திற்கு என் மனம் போவது போல் என் உடலும் போக முடிந்தால் இப்படி கண்ணீர் வெள்ளத்தில் மிதக்க மாட்டேனே என்று அழுகிறாள்.

அந்த அதிகாரதில் வரும் ஒரு குறள்:

கொடியார் கொடுமையின் தாம்கொடியது இந்நாள்
நெடிய கழியும் இரா

கொடியார் = தன்னைத் தவிக்க விட்டு போயிருக்கும் காதலனைச் சொல்கிறாள். தனிமைக் கொடுமையில் தள்ளிய கொடுமைக்காரன்.

கொடுமையின் = அவன் ஏற்படுத்தியிருக்கும் கொடுமையை விட

தாம் கொடிது = இவை கொடுமையாக இருக்கிறது

நெடிய கழியும் இரா = நீண்டு, நெடியதாக மெதுவாகக் கழியும் இரவுகள்.

இப்படிப் படிக்கலாம்:
இப்போதெல்லாம் நெடிய கழியும் இரவுகள் அந்தக் கொடுமைக்காரன் செய்யும் கொடுமையை விட கொடிதாக இருக்கிறது.

இப்போது அவன் அருகில் இல்லாத நாட்களில் உறக்கம் இன்றி இரவுகள் நீண்டு போகிறது. இதுவே பெரும் கொடுமையாக இருக்கிறது - எவ்வளவு துன்பம் என்றால் அந்தக் கொடுமைக்காரன் ஏற்படுத்தியிருக்கும் கொடுமையைக் காட்டிலும் பெரிதாக இருக்கிறது.

கொடுமைக்காரா என்று அவனுக்கு ஒரு திட்டு, அவன் அருகில் இல்லாதது கொடுமையாக இருக்கு என்ற புலம்பல், அவன் நினைவால் நீண்டு போகும் உறக்கமற்ற இரவு மேற்சொன்ன கொடுமையை விட, துன்பமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு - எல்லாம் ஏழே சொற்களில்.

தளை தட்டாது, வெண்பா வடிவம் கெடாது, அழகுணர்ச்சி போகாது படிப்பவரை வாய்பிளக்கச் செய்யும் ஐயனின் மொழியாளுமை.

அதிகாரம் முழுதும் படிக்கையில் அப்பெண்ணின் மீது பரிதாபம் மட்டுமல்ல நமக்கே கண்ணீர் முட்டும்படி எழுதியிருக்கிறார்.

உண்மையில் திருக்குறள் ​மொத்தமும் தோண்டத் தோண்ட வியப்பூறும் மணற்கேணி.

Wednesday, August 31, 2022

துட்டு கொடுத்தாவது அந்தத் துன்பத்தை வாங்கிக்கோ - வள்ளுவர்

 

 

உலகத்துல யாராச்சும் இப்படிச் சொல்லி கேள்விப்பட்டு இருக்கியா?


டேய், ஒரேடியா கதை விடாதே. அப்படியெல்லாம் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

அட, உண்மையாத்தான் சொல்றேன். வள்ளுவர் ஒரு so called "துன்பத்தை" ("கேடு" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்) அடைய பொருள் (காசு, பணம், துட்டு, மணி மணி) கொடுக்க வேண்டி இருந்தாலும் பரவாயில்லை; பொருள் கொடுத்தாகிலும் அதைப் பெறு என்கிறார். அது என்னவாக இருக்கும்? யோசிச்சுப் பாரேன்.

எவ்ளோ யோசிச்சாலும் தோணலைடா. நீயே சொல்லிடு.

சரி. சொல்றேன்.
ஐயன் மனிதர்கள் எல்லோரையும் நேசித்தவர். ஒருத்தருக்கு ஒருத்தர் உதவணும், நமக்குத் தீங்கிழைத்தவருக்கும் அவர் நாண நல்லதே செய்யணும் என்ற பெரிய மனசுக்காரர். சமூகம் ஒற்றுமையாக இருக்க எல்லோருக்கும் உதவி செய்யும் மனம் வேண்டும் என்கிறார். நாம் சம்பாதித்த அறிவு, பொருள் மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்று நினைக்கிறார். தன்னலம் இன்றி பொதுநலனுக்காக செய்வதை இன்றைய பேச்சுவழக்கில் 'தொண்டு செய்வது' என்கிறோம் இல்லையா? அதைச் சொல்கிறார்.

தொண்டு-ன்னு பொதுவா சொல்லிடறோம். எதையும் எதிர்பார்க்காமல் தங்கள் அறிவு, நேரம், உழைப்பு என தொடர்ச்சியாக பொது நோக்கத்துக்காகக் கொடுப்பது என்பது அவ்ளோ எளிதானது அல்ல. சொல்லிடலாம்; செஞ்சு பார்த்தா தான் அதில் உள்ள சிக்கல்கள் தெரியும். பல நேரங்களில் எப்படா முடியும் என்று "துன்பமாக" தோன்றும்.

கொஞ்சம் அப்படி-இப்படி இடைஞ்சலாக, துன்பமாக இருந்தாலும் நீ செய்யும் செயல் பொது நலனுக்காக. கைமாறு எதிர்பாரா சேவை செய்கிறாய். நீ செய்யும் செயலால் சில-பலர் நன்மை அடையப் போகிறார்கள். இப்படியான செயலைச் செய்ய ஒரு வேளை, உன் கைப்பொருளை செலவழிக்க வேண்டி இருந்தாலும் தயங்காதே. தொண்டு செய்யும் ஒருவனுக்கு இதனால் கேடு வந்தாலும் பரவாயில்லை, செலவழித்தாகிலும் அந்தத் "துன்பத்தை" அடைந்திட வேண்டும் என்கிறார்.

உண்மையில், பொது நலனுக்குப் பாடுபடுவது இன்பமான ஒன்று; அப்படிச் செயல்படும் போது வரும் சிக்கல்களும் இடைஞ்சல்களும் கூட துன்பம் கிடையாது என்ற மறைபொருள் (hidden message) கொண்ட குறள் அது.

எங்கள் ஆசிரியர் அடிக்கடி சொல்வார்: "திருக்குறள் சந்தன மரம் போல. தேய்க்கத் தேய்க்க மணக்கும்" என்று.

யோசிச்சுப் பாரேன். ஏழே சொற்களில் இவ்வளவு அடர்த்தி.
வாவ்.

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து

'ஒப்புரவு அறிதல்' என்ற அதிகாரத்தில் உள்ள ஒரு குறள் இது. ஒப்புரவு என்ற சொல்லே வியப்புக்குரிய ஒன்று.

ஒப்பு = சமம்.
ஒப்புரவு = பிறரையும் தனக்குச் சமமாகக் கருதி உதவுதல்.

குறளை எளிமையாகப் படித்தால்,

ஒப்புரவால் ஒருவனுக்கு கேடு வரும் என்றால்,
அந்த "கேடு" விலை கொடுத்து கூட பெறும் தகுதி படைத்தது.

இந்த முழு அதிகாரமுமே இப்படித்தான் இருக்கும். படித்துப்பார் சொக்கிப் போவாய். இதில் இருக்கும் பத்து குறள்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது போல எழுதியிருப்பார்.

கைமாறு (பதில் உதவி) எதிர்பார்த்தா மழை பெய்யுது? அது போல எதையும் எதிர்பாராது செய்; உன்னிடம் உள்ள பொருள் எல்லாம் தொண்டாற்றவே, தயங்காமல் செய்; தொண்டாற்றவது போன்ற நல்ல செயல் எந்த உலகிலும் இல்லை.
நாம் உயிரோடு இருப்பதே எதையும் எதிர்பாராது பொதுச் சேவை செய்யவே. நல்ல உள்ளம் கொண்ட உன்னிடம் சேர்ந்திருக்கும் செல்வம், ஊர் நடுவில் எல்லோருக்கும் பயன்படும் கிணறு நீர் நிரம்பியது போன்ற நன்மை செய்யக்கூடியது எனவே தாராளமாக எல்லோருக்கும் உதவு. மருந்துக்காக தன்னையே தரும் மருத்துவ மரம் போல உன்னிடம் உள்ள எதையும் பொது நலனுக்காகக் கொடு. தப்பில்லை.

Difficult days என்பது போல கொஞ்சம் இடறு நேரும் காலங்கள் ஆனாலும் உன் தொண்டாற்றும் மனதைத் தளரவிடாதே.

என்றெல்லாம் சொல்லிவிட்டு கடைசியாக மேலே சொன்ன குறளைச் சொல்கிறார் ஐயன்.

தொண்டாற்றுவதால் கேடு வருவது போல் இருந்தால் விலை கொடுத்து கூட அந்த அந்தத் துன்பத்தைப் பெறலாம் என்று முடிக்கிறார்.

-----

தன்னலமின்றி தமிழுக்காக தங்கள் நேரம், உழைப்பு, அறிவு என இயன்றதையெல்லாம் கொடுக்கும் தமிழ்ச் சங்கத்தாருக்கும் தமிழாசிரியர்களுக்கும் இக்குறளை மேற்கோளிட்டு பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.
உங்களது இந்தத் "துன்பம்" பெரிதும் மதிக்கப்படும் ஒன்று.

வாழ்க தமிழ். 
வாழிய தமிழுக்கு உழைக்கும் உங்கள் நல்லுள்ளம், தொண்டுள்ளம்.

Saturday, May 28, 2022

கார் புதுசு வாங்கலாமா பழசு பரவாயில்லையா - வள்ளுவர் என்ன சொல்றார்?

 உலகத்துல கார் வாங்க வள்ளுவர்ட்ட யோசனை கேட்கும் ஆளு நீதான்டா. அதும், நான் கார் வாங்குகிறேன், நீ குறளை வைத்து விளையாடுற, நடத்து.

அட சும்மா விளையாட்டுக்கு ஒரு புகழ்பெற்ற குறளை கார் வாங்கும் முடிவில் பொருத்திப் பார்த்தேன் என்றான் செல்வம்.

சரி, ஆரம்பிச்சுட்ட, சொல்லு கேட்போம்.

அந்த ஒரு குறளை மட்டும் விளக்கவா இல்லை "பல குறள் மன்னன்" என சில குறள் விளக்கங்களை இணைத்துச் சொல்லவா?

யப்பா, என் மூளை ஒரு நேரத்தில் ஒன்று என்றே புரிந்துகொள்ளும், நீ ஒரு குறள் மட்டும் சொல்லு இப்போதைக்கு.

"அப்படியே ஆகட்டும்" என்று ரொம்பவே விளையாட்டு மனநிலையில் இருந்தான் செல்வம்.

கார் வாங்க எவ்ளோ காசு வெச்சிருக்க?

ஏற்கனவே கொஞ்சம் சேர்த்து வைத்திருந்தேன், இப்போ அலுவலகத்தில் ஊக்கத் தொகை கொஞ்சம் கொடுத்தாங்க; எல்லாமா சேர்த்து கார் வாங்க ரெடி.

கேட்ட கேள்விக்கு முழுசான பதிலைக் காணோம். இருக்கட்டும்.
அடுத்த கேள்வி. என்ன கார் வாங்க யோசிச்சு வெச்சிருக்க?

அங்கதான் கொஞ்சம் இடிக்குது. Tesla வின் புது மாடல் மேல ஒரு கண்ணு. தெரிஞ்சவங்க சிலர் வாங்கிட்டு ஒரே அலப்பறை. எனக்கும் ஆசையா இருக்கு. ஆனா காசு கொஞ்சம் பத்தாது. அங்கே இங்கே புரட்டி சமாளிச்சுடலாம்னு நினைக்கிறேன். Tesla வின் புது மாடல்ல base version க்கு போதுமான அளவு தேத்திடுவேன். ஆசை நிறைவேறிடும். என்ன சொல்ற?

நான் என்ன சொல்றது, வள்ளுவர் சொல்கிறார் கேள்.
அதுக்கும் முன் இன்னொரு கேள்வி. ஒரு Fully loaded, 3 ஆண்டு பழைய வண்டி வாங்க உன் சேமிப்பு போதுமா?

தாராளமா போதும். மிச்சம் கூட இருக்கும். ஆனா புதுசு புதுசுதான்டா.

இல்லைங்கலை. இப்போ, வேற ஒரு சூழலுக்கு வள்ளுவர் எழுதிய குறளை இங்கே சொல்றேன், பொருத்திப் பார்த்துக்கோ.

காட்டில் மறைந்திருக்கும் முயலை வெற்றிகரமாக அம்பு எய்து வேட்டையாடுபவனாக இருப்பதைவிட, போர் யானையைக் கொல்ல வேல் வீசும் வீரனாக இருப்பது இனிது என்கிறார். யானை பிழைச்சுட்டா/தப்பிச்சுட்டா கூட பரவாயில்லை முயல் வேட்டைக்காரனாக இருப்பதைக் காட்டிலும் இதுவே இனிது என்கிறார்.

அதாவது, இருக்கிற காசில் புது மாடல் base version காருக்குச் சொந்தக்காரனாய் இருப்பதைவிட, எல்லா வசதிகளும் கொண்டிருக்கும் Fully loaded, 3 ஆண்டு வண்டியை வாங்குவது இனிது என்கிறேன் நான்.

யப்பா டேய்..
உன் விளக்கத்தை வள்ளுவர் கேட்டார்னா குபீர்ன்னு அதிர்ச்சி ஆகிடுவார்டா.

ஒன்னு சொல்றேன் கேளு. என் தமிழாசிரியர் சொல்லிக் கொடுத்த trick.
பொதுவாக மாணவர்கள் தவிர்க்கும் இலக்கண, இலக்கிய வகுப்புகளை எப்படிக் கையாள்வது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

ஏதாவது ஒரு ஆர்வம் மிக்க, தொடர்பற்ற தலைப்பில் பேசத் துவங்க வேண்டும். மாணவர்களின் கவனத்தை முழுசாகப் பெறும் போது, சொல்ல வந்த பாடத்தையும் உள்நுழைத்து பேசிட‌ வேண்டும். தேனில் மருந்தைக் குழைத்து பிள்ளைகளுக்குக் கொடுப்பதைப் போல.

தேன்+மருந்து கலவையை உன் வாயில் போட்டுட்டேன். இனி, காரும் வரும் குறளும் மறக்காது. என்சாய் மாடி, அடுத்த வாரம் வர்றேன் நேரமாச்சு என்றபடியே கிளம்பினான்.

----------

கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

கான = கானகம் = காடு

வேறு எந்தச் சொல்லுக்கும் விளக்கம் தேவைப்படாத குறள்.

கானமுயல் = காட்டுமுயல் என்று சொல்லிவிட்டு, யானைக்கு எதும் சொல்லாமல் விடுகிறார். காட்டுயானை அல்ல, போர்க்களத்தில் உள்ள யானை என்று நம்மையே புரிந்து கொள்ள வைக்கிறார். குறள் இருக்கும் அதிகாரம் படைச்செருக்கு. அதனால் போர்க்களம், போர்யானை என்பன இயல்பான சிந்தனை.

எய்த அம்பு = முயலை நோக்கி எய்த அம்பு.
யானை பிழைத்த வேல் = யானையை நோக்கி எறிந்த வேல், ஆனால் யானை பிழைத்துவிட்டது. அப்படியெனில் முயல் பிழைக்கவில்லை என்ற செய்தியும் உள் அடக்கியிருக்கிறார்.

பெரிய முயற்சிகள் செய்பவராக இருப்பது பெருமை, சிறப்பு என்றுகூட சொல்லவில்லை. முழுமையாக வெற்றி கிட்டாவிட்டாலும், அப்படி இருப்பதே "இனிது" என்கிறார். இன்றைய பேச்சு வழக்கில், "அதான் பரவாயில்லை" என்பது போல.

ஐயனே, குறளை நவில் தோறும் வியந்து போகிறோம். வாழிய நின் புகழ்.

 

#குறளும்_பொருளும்

Friday, February 25, 2022

கமா, சோம்பல் மற்றும் பக்கோடா

 வாடா செல்வம், நேத்திக்கே உங்கிட்ட பேசணும்னு நெனச்சேன், முடியாம போய்டுச்சு. உட்கார், ஒரு காபி போட்டுட்டு வர்றேன் குடிச்சுட்டே பேசலாம்.

வேலையெல்லாம் எப்படி போகுது?

ம்.. கொஞ்சம் கடியாத்தான் போகுது. எதையாவது உடைச்சிடறானுக; அப்புறம் நாம விடிய விடிய உட்காந்து சரிசெய்ய வேண்டி இருக்கு. ப்ச்., அதுக்குத்தானே சம்பளம் குடுக்கறாங்கன்னு ஒன்னும் பேசறதில்லை. புகார் படிக்க ஆரம்பிக்கும் போதே முற்றுப்புள்ளி வெச்சிடறது. எதுக்கு வம்பு.

காபி நல்லாயிருக்கு.

அடுத்த முறை வரும்போது கொஞ்சம் வெங்காய பக்கோடா போடு; இல்லாட்டி நான் போட்டு எடுத்து வர்றேன். வெறும் காபி குடிக்கறத்துக்கு அது இன்னும் நல்லாயிருக்கும்.

உனக்கு இல்லாமலா? கண்டிப்பா. இன்னிக்கு கொஞ்சம் சோம்பலா இருக்கு, அடுத்த முறை போண்டா போட்டு வைக்கிறேன்.
அது கிடக்கட்டும், முற்றுப்புள்ளின்னதும் நினைவுக்கு வருது, தமிழில் நிறுத்தக்குறிகள் எனும் punctuations போன நூற்றாண்டு வரை இல்லைன்னு சொன்னாயாமே? உண்மையாவாடா?

ஆமா.
அச்சு இயந்திரங்கள் வந்து, நாம புத்தகங்கள் அச்சிடும் போது கூட நிறுத்தக் குறிகள் தமிழில் புழக்கத்தில் கிடையாது. ஐரோப்பிய மொழிகள் அறிமுகம் ஆன போது, நமக்கு punctuations புதுசா இருந்திருக்கு. அவர்களுக்கே அது அப்போது ஒரு மாதிரி புதுசுதான். நாமளும் சும்மா இருக்காம உரைநடையில் பயன்படுத்திப் பார்த்த போது, அட இதுகூட வசதியாத்தானே இருக்குன்னு கபால்ன்னு பிடிச்சிகிட்டோம்.

ஆங்கில punctuation பற்றி ஒரு interesting ஆன trivia சொல்லவா?

ம், சொல்லு கேட்போம்.

வரிசையா பட்டியல் இடும்போது நடுவில் கமா போடறோம் இல்லையா? கடைசிச் சொல்லுக்கு முன் and என்று எழுதி கடைசிப் பட்டியல் பொருளை எழுதி முடிச்சிடறோம்.
அதாவது,
Fri, Sat and Sun. என்று.

கொஞ்ச காலம் முன் வரை கூட andக்கு முன் ஒரு கமா இருந்திருக்கிறது. Fri, Sat, and Sun. என்று.
அதான் and இருக்கே வெட்டியா எதுக்கு கமா - அச்சு செலவை மிச்சம் பிடிக்கலாம் என்று தூக்கிட்டானுக.

ஓ வாவ்!

சரி சோம்பேறி. நான் கிளம்பறேன்.

டேய் இருடா. சோம்பல் போய்டுச்சு. பக்கோடா போட்டுத் தர்றேன் சாப்டுகிட்டே இன்னும் கொஞ்ம் நேரம் பேசிட்டு இருக்கலாம்.

சரி, செய். சோம்பல் இல்லா மன்னவனுக்கு அவன் ஆட்கள் அளந்த நிலமெல்லாம் சொந்தமாகும்னு வள்ளுவரே சொல்லியிருக்கார். சோம்பலை வென்ற உன்னால் கொஞ்சம் வெங்காய பக்கோடா சொந்தமாகாதா என்ன. நீ ஆரம்பி, நான் முடிக்கிறேன் - சாப்பிட்டு.

இப்போ சொன்னியே அந்தக் குறளையும் அதற்கான விளக்கத்தையும் இந்த வெங்காயத்தை வெட்டிட்டே சொல்லு, நான் மாவு கரைக்கிறேன்.

மடியிலா மன்னவன் எய்தும் அடி, அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.

அதாவது,
சோம்பல் இல்லாத மன்னவன் அடையும் எல்லை என்பது, அவன் ஆட்கள் - surveyors-ன்னு வெச்சுக்கோயேன்; அளந்த எல்லா நிலமும் உள் அடங்கியது என்கிறார்.

இப்போதைக்கு நீ சுடும் பக்கோடாவின் கலோரிகளை அளக்கிறேன், அளவாக உண்கிறேன்.

பக்கோடாவும் நல்லாயிருக்கு. ஒரு டப்பால 4 போட்டுக் கொடு அப்புறமா கொஞ்சம் சாப்பிடறேன்.

நேரமாச்சு, கிளம்பறேன். அடுத்த வாரம் வர்றேன். Bye.

---

மடி = சோம்பல்
மடியிலா = சோம்பல் இல்லாத
மன்னவன் எய்தும் அடி = மன்னவன் எய்தும் எல்லை
அளந்தான் = Surveyor
தாயது = சொத்து
எல்லாம் ஒருங்கு = எல்லாம் சேர்ந்து
---

மடியிலா மன்னவன் எய்தும் அடி,  அளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு

சோம்பல் இல்லா மன்னவன் எய்தும் எல்லை, நில அளவர்கள் -surveyors அளந்த தாயம் எல்லாம் உள் அடங்கியது.

 

#குறளும்_பொருளும்

Sunday, February 13, 2022

நீங்க படிக்கிற பள்ளிக்கூடத்துக்கு நான் தலைமை ஆசிரியர், தம்பிகளா!

 

 
கண்மணி, அன்போட காதலன் நான் எழுதும் கடிதம்..
கண்மணியே காதல் என்பது..
கண்மணி நீ வர காத்திருந்தேன்..
கண்மணிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது..
கண்மணி ஓ காதல் கண்மணி..

என தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட ஒரு ஏழெட்டு கண்மணி பாட்டாவது சொல்லிடுவோம். திரைப்பாடல்கள் மட்டுமல்ல தினப்படி வாழ்க்கையிலும் "கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துக்குவேன்", "கண்ணுக்கு கண்ணானவள்" என்று கண்மணி எனும் பாவையைப் பற்றிப் பேசாதவர் இல்லை, பாடாத புலவர்கள் இல்லை, காதலர்களும் இருந்ததில்லை; இருப்பதில்லை.

மனிதர்களோ, விலங்கு, பறவை மற்ற உயிரினங்களோ, எல்லாவற்றுக்கும் கண்ணும் அதன் பார்வைக்குக் காரணமான பாவையும் (கண்மணி)யும் எவ்வளவு இன்றியமையாதது என அறிந்திருப்பதால் காதலன்/காதலியை அந்தக் கண்மணி போன்றவர் என்று சொல்லி மகிழ்கிறோம்.

மேலே சொன்னமாதிரியான திரைப்பாடல் ஆசிரியர்கள், புலவர்கள், எல்லோரும் காதலன்/காதலியை அவ்வளவு சிறந்த கண்மணிக்கு ஒப்பாக வைத்து கிறங்கிப் போய் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.

நம்மாளு வள்ளுவர் அவர்களைப் பார்த்து, தம்பிகளா சின்னப் பசங்க எல்லாம் ஓரமா போய் விளையாடுங்க என்கிறார் ஒரே ஒரு குறள் மூலமாக.

காதலன் தன் காதலியை நினைத்து தன் கண்மணியிடம் பேசுவது போல ஒரு குறள்.

"யய்யா கண்மணி, நீ மிக உயர்ந்த, மிக மிக மதிப்பு மிக்க உறுப்புதான். இல்லைங்கல. ஆனா பாரு, என் காதலி உன்னைவிட உயர்ந்தவள். அந்த அழகு நெற்றியாளை என் கண்ணுக்குள் வைத்து அவள் வழியாக உலகைப் பார்க்கப் போகிறேன்; நீ கொஞ்சம் இடத்தைக் காலி பண்ணு" என்கிறார்.

படிப்பதை நிறுத்திவிட்டு இக்காட்சியை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நம் உடலின் உறுப்புகளில் மிக உயர்ந்ததான கண்மணியை விட உயர்ந்தவளாம் காதலி. கண்மணி இருக்கும் இடத்தில் அவளை வைத்து காண்பவை எல்லாம் அவளாகவே காண விரும்புகிறானாம். அதனால் தன் சொந்தக் கண்மணியை இடத்தைக் காலி செய், போ என்கிறானாம்.

யோவ் வள்ளுவரே, காதல் மன்னன்யா நீர். பின்றய்யா என்று சொல்ல வைக்கும் குறள்.

கருமணியின் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்

கருமணியின் = கண்ணின்
பாவாய் = Pupil
நீ = நீ
போதாயாம் = போய்விடேன்
வீழும் = நான் மயங்கிப் போய் காதலில் வீழ்ந்து கிடக்கும்
திரு + நுதற்கு = அழகு + நெற்றி கொண்டவளுக்கு

இப்படிப் படிக்கலாம்:
"கண்ணின் பாவையே நீ போய்விடேன் - என்னைக் காதலில் வீழ்த்திய அழகு நெற்றியாள் இங்கு வருகிறாள்; அவளுக்கு நீ இருப்பதால் இடமில்லாமல் இருக்கிறது"

இதில் ஒரு இரட்டுற மொழிதல் (Double meaning) வேறு - நல்ல விதமாகத்தான் :)

பாவை என்ற சொல்லுக்கு பெண் என்ற பொருளும் உண்டு. இவன் கண்ணுக்குள் இருக்கும் பாவையை போகக் சொல்லிட்டு மனதுக்குள் இருக்கும் பாவையை (காதலியை) அங்கே வைக்கப் போகிறானாம்.

கவிதையில் அழகு, மாபெரும் கற்பனை, செய்யுள் வடிவம் மாறாமல் தளை தட்டாமல் எழுதிய ஒன்றரை அடி அதிசயம். 
ஐயனே, உம்மை நவில் தோறும் அதிசயிக்கிறோம்.